காத்தான்குடியில் பெண் பசு கொலை! கன்றின் பாகங்கள் பள்ளிவாசலின் முன்னால்..!
காத்தான்குடி முதலாம் குறிச்சியில் ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ள ஈமான் பள்ளிவாசலுக்கு எதிரில் கொல்லப்பட்ட பசு மாடு ஒன்றினது கர்ப்பப்பையிலிருந்த சினைக் கன்று ஒன்று வெட்டிக் குதறப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அப்பள்ளிவாசலின் தலைவரும், காத்தான்குடியின் மூத்த கல்விமானுமாகிய ஜாமிஅதுஸ் ஸித்தீக்கிய்யா மகளிர் அரபுக்கல்லூரின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம்.பி. முகைதீன் இன்று காலையில் ‘வார உரைகல்’ லுக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து உடனடியாக அங்கு சென்றபோது அவரும், அப்பள்ளிவாசல் மௌலவி உட்பட பொதுமக்கள் பலரும் அந்த கொல்லப்பட்ட சினைக் கன்றின் எச்சங்களைப் பாதுகாத்த வண்ணம் அவ்விடத்தில் நின்றனர்.
இக்கொரூர சம்பவம் குறித்து தாங்கள் காத்தான்குடி நகரசபைத் தவிசாளருக்கும், பொதுச் சுகாதாரப் பகுதி அதிகாரிகளுக்கும், காத்தான்குடி பொலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளதாகவும், இதுவரை (மு.ப. 10:48 மணி வரை) எவரும் அவ்விடத்திற்குச் சமூகமளிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி தனித்துவமான முஸ்லிம்களைக் கொண்ட பிரதேசம் என்று வாயளவில் சேப்பட்டாலும் இஸ்லாமிய மார்க்கமும், ஏனை மதங்களும், அரசாங்கமும் தடைசெய்துள்ள இந்த சட்டவிரோத செயலைத் துணிந்து செய்திருப்பவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அங்கிருந்த பொதுமக்கள் வலியுறுத்தினர்.
காத்தான்குடியில் இவ்வாறு பெண் பசுக்களை மாத்திரமல்லாது, கடந்த றமழான் மாதத்தின் 27ம் இரவன்று சஹர் செய்வதற்காக காத்தான்குடி நகரசபையின் சர்வாதிகாரத் தவிசாளரும், அவரது குடும்பத்தினரும் பல எருமை மாடுகளையும் சட்டவிரோதமாகவே பகிரங்கமாக அறுத்ததோடு மாத்திரமல்லாது அரசாங்கத்தினால் புனித பிரதேசமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள முகைதீன் மெத்தைப்பள்ளிவாசல் வளாகத்திலேயே சுமார் 4000 முஸ்லிம் மக்களுக்கு விருந்தோம்பல் நடாத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
‘தலைவன் எவ்வழி குடிகளும் அவ்வழி’ என்பது இக்காத்தான்குடியைப் பொறுத்தவரை இன்றும் பின்பற்றப்பட்டு வரும் வாஸ்தவமான தத்துவமாகும்.

No trackbacks yet.