ஜூலை, 2009 க்கான தொகுப்பு

மின்னஞ்சல் வழியாக அனுப்பிய வினாவுக்கு தாருல் அதர் அத்தஅவிய்யா பதிலளிக்குமா?

‘பெண்கள் வளையல்களாலான தங்க நகைகளை அணியலாமா?’ எனும் தலைப்பில் நான் கீழ்வரும் ஆக்கத்தினை பல்வேறு வினாக்களைத் தொடுத்து காத்தான்குடி தாறுல் அதர் அத்தஅவிய்யாவின் மின் அஞ்சல் முகவரிக்கு சுமார் மூன்று முறை அனுப்பியிருந்தேன். எனினும் இதுவரை அவர்களிடமிருந்து எந்தவொரு பதில்களும் எனக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. ஆதலால் இதனை தங்களின் ‘வாரஉரைகல்’ பத்திரிகைக்கு அனுப்பி வைக்கின்றேன். ‘வார உரைகல்’ அடுத்த பிரதியில் இதனைப் பிரசுரித்தேனும் எனக்கு தக்க பதில்களை பெற்றுத் தாருங்கள். இதோ கடிதம் வருமாறு:-

‘நான் இதுவரை காலமும் கேள்வியுறாத மேற்படி தலைப்பில் தாங்கள் அண்மைக் காலமாக பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றீர்கள். இது ஒரு புதிய விடயமாக இருந்தாலும் உங்களின் அமைப்பினால் பல வருட காலமாக ஆய்வு செய்யப்பட்டு தெளிவான விடை காணப்பட்டதாக தங்களின் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். எனினும் தங்களின் தாருல் அதர் அமைப்பினை சில வருடமாகவே நான் அறிவேன். தங்களின் கருத்துக்களில் எந்தளவு நம்பகத் தன்மை காணப்படலாம் என்பதில் ‘இந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றீர்கள்’ என்ற கருத்து சற்று தளர்வைத் தோற்றுவிக்கின்றது.

இருந்தாலும் யாருக்கும் அஞ்சாமல் முற்போக்குடன் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உங்கள் கருத்துக்களைக் கச்சிதமாகக் காவுவதானது காத்தான்குடியைப் பொறுத்தமட்டில் வரவேற்கத்தக்கதே! எனக்கு பெண்கள் தங்க வளையல்களால் உருவாக்கப்பட்ட நகைகளை அணியலாமா? என்னும் விடயத்தில் பின்வரும் சந்தேகங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு என் மனம் திருப்தி காணும் வகையில் விடை பகர்ந்தால் தூய இஸ்லாம் தொடர்பில் உங்களின் கருத்துக்களை ஏற்று தற்போது நான் இருக்கும் நிலையிலிருந்து மீட்சி பெற முடியும்.

தாங்கள் இணையத்தில் பதித்திருக்கின்ற ஒலிப்பதிவுகள் தெளிவாக விளங்கவில்லை. ஆதலால் எனது பின்வரும் சந்தேகங்களுக்கு எழுத்து மூலம் விடைபகர்ந்தால் உதவியாக இருக்கும். சந்தேகங்கள்:

01.தங்கத்தினாலான வளையல்கள் சார்ந்த நகைளைத் தவிர வேறு ரகத்தில் (வடிவங்களில்) தங்கத்தில் நகைசெய்து அணியலாமா?

02.தங்கத்தில் நகை அணிவதனை விடுத்து ஏனைய உலோகங்களில் நகை செய்து அணியலாமா? உதாரணமாக செம்பு, வெள்ளி, பிளாற்றினம், பித்தலை, வெள்ளைத் தகடு, வெள்ளிரும்பு போன்ற இன்னும்பிற

03.பெண்கள் தங்க வளையல் நகைகள் அணியக் கூடாது என்றால் ஆண், பெண் இல்லாதவர்கள் அவற்றை அணியலாமா?

04.தங்க நகை அணிவது ஹறாம் என்றால் நகை வியாபாரம் செய்யலாமா? அது ஹறாமாகுமா? நமது இஸ்லாமியர்களுக்கு விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டது எனும் விவாதத்திற்கு வந்து ஏனைய மதத்தினருக்கு அல்லது கொள்கை உடையவர்களுக்கு அவற்றை விற்கலாம் என்றால் அவர்களுடன் எத்தகைய வியாபாரமும் மேற்கொள்ளலாமா? உதாரணமாக சாராயம், போதைவஸ்து, ஆபாசப் பொருட்கள் விற்பனை.

05.இவ்வளவு காலமும் தங்க நகைக் கடை வைத்து இஸ்லாமியர்களிடையே தொழில் புரிந்து இந்த விடயத்தில் உண்மையான தெளிவு கண்ட பின்னர் அவ்வாறு இவ்வளவு காலமும் அதனால் உழைத்த பணம், பொருட்களை என்ன செய்யலாம்? அவை ஹறாமாகுமா?

06.ஒருவர் நமது பிரதேசத்திலுள்ள வளையல்களினாலான தங்க நகை வியாபாரம் செய்யும் கடையில் தொழில் புரியலாமா? உடனே விலகிக் கொள்ள வேண்டுமா?

07.தற்கால நகைக்கடைகளில் தனித் தங்கத்திலான அணிகலன்களைக் காண்பது அரிதாகும். தங்கத்துடன் பிறிதொரு சேர்மானம் சேர்த்தே நகைகள் செய்யப்படுகின்றன. தனியே தங்கத்தில் நகை செய்யும்போது அவை இலகுவில் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையைப் பெறாது. ஆதலால் தங்கம், ஏனைய உலோகங்கள் (உதாரணமாக செம்பு, வெள்ளி, பிளாற்றினம், பித்தளை, வெள்ளைத் தகடு, வெள்ளிரும்பு முதலான) இணைந்த கலவைகளைக் கொண்டே நகைகள் வடிவமைக்கப்படுகின்றன. ஆகவே தங்கத்துடன் மிக்ஷர் செய்யப்பட்ட கலவை நகைகளைத்தான் இன்றைய நடைமுறையில் நம் பிரதேசங்களில் அதிகமானோர் அணிகின்றனர். மிக்ஷர் செய்யப்பட்ட இவற்றை அணியக் கூடாது என்று ஹதீஸ் ஆதாரம் உள்ளனவா? அல்லது தனியே தங்கத்தினால் செய்யப்பட்டதுதான் என்றுள்ளதா?

08.இந்த விடயத்தில் காது குத்துவது ஹறாம் என்றால் ஏற்கனவே குத்தப்பட்ட எமது தாய், பிள்ளைகள், மனைவிமார்களின் காதுகளில் காணப்படும் ஓட்டைகளுக்கு மார்க்கத்தீர்ப்பு என்னவாகும்? காது குத்தப்பட்ட அவர்களுடன் வாழலாமா?

09.இவ்வாறான கொள்கைகளை ஏற்கனவே அல்பானிய இமாம்கள் பரப்பிச் சென்று விட்டனர். அவர்களது மறுவடிவமே நீங்கள் என்று காத்தான்குடியிலுள்ள சில அமைப்புக்கள் கூறுகின்றனவே!? அல்பானிகளின் ஏஜென்டுகளாக தாறுல் அதரைக் கொள்ளலாமா?’ நன்றி! 

RM.Rijaque Ahamed,  Email ID: rijaqueahamed@yahoo.com 02.07.2009

இறை நெருக்கத்திற்கு வழிகாட்டும் இரசவாதம் – அங்கம் :5

அருமையானவனே! கடந்த நான்கு வார காலமாக இத்தொடரைப் படித்துவரும் நீ கல்பு எனும் ரூஹினுடைய தத்துவங்களை ஓரளவுக்கேனும் புரிந்து கொண்டிருப்பாய். அதனால் உன் மனதில் பல சந்தேகங்கள் எழுந்திருக் கக்கூடும்.

அதாவது, மனிதனில் மிருகங்கள், துஷ்ட மிருகங்கள், ஷைத்தான்கள், மலக்குகள் முதலானவர்களுடைய குணங்கள் எல்லாம் சேர்ந்திருக்க மலக்குகளின் குணம்தான் மனிதனில் நிலைத்திருக்க வேண்டிய குணமென்றும், மற்றவையெல்லாம் மனிதனுக்கு அந்நியமாக இருக்க வேண்டுமென்றும், மலக்குகளின் குணத்தை அடைவதற்காகவே மனிதன் படைக்கப்பட்டான் என்றும், ஏனைய குணங்களைக் கொள்வதற்காக இவனைப் படைக்கவில்லை என்றும் எவ்வாறு அறிவது? உறுதி கொள்வது? என நீ கேட்கலாம்.

பின்வரும் ஒரு சிறிய உதாரணத்தினால் உனது சந்தேகம் நிவர்த்தியாகுமென்று நான் ஆதரவு வைக்கின்றேன்.

மனிதனானவன் மேற்கண்ட இருவகை மிருகத்திலும் சிறந்தவனாகவும், ‘கமாலிய்யத்’ என்னும் பூரணத் தன்மை உடையவனாகவும் இருக்கின்றான். எந்த வஸ்துவுக்கு அதன் சிறந்த பதவியாகிய ஒரு விஷேசமான குணம் கொடுக்கப்பட்டு இருக்கின்றதோ அக்குணத்திற்காகவே அந்த வஸ்து படைக்கப்பட்டிருக்கின்றது.

அதெவ்வாறென்றால், குதிரையானது கழுதையிலும் சிறந்தது. கழுதை சுமை துக்குவதற்காகப் படைக்கப்பட்டது. குதிரையோ யுத்த களத்திற்கு போர் வீரனைச் சுமந்து செல்வதற்காகப் படைக்கப்பட்டுள்ளது. மேலும் கழுதைக்குக் கொடுக்கப்பட்டிருப்பது போன்று குதிரையாலும் சுமைகளைச் சுமந்து செல்ல முடியும். என்றாலும் அது சிறப்புப் பெறுவது சுமைகளைச் சுமப்பதினால் அல்ல. போர் வீரனைச் சுமந்து போர்க்களத்திற்குச் செல்வதினாலேயேயாகும். குதிரை இந்தச் சிறப்புக் குணத்தை விட்டும் தளர்ச்சியடையுமானால் அதற்கு கழுதையின் பதவிதான் கிடைக்கும். மேலும் அதற்கு கேடும், குறைவும் ஏற்படும்.

இதுபோலவேதான் சிலர் மனிதனை உண்ணவும், உழைக்கவும், உறங்கவும், சுகம் பாராட்டவுமே படைக்கப்பட்டிருப்பதாக நினைத்துக்கொண்டு தங்களின் வாழ்நாள் முழுவதையும் அக்காரியங்களிலேயே கழிக்கின்றனர். இன்னும் சிலர் தங்களுக்குள்ள உடல் வலிமையையும், அதிகார பலத்தையும் வைத்துக்கொண்டு இதர மனிதர்களையும், வஸ்துக்களையும் பயில்வான்கள் போல அடக்கியாள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

இந்த இரண்டு எண்ணங்களுமே தப்பானவையாகும். ஏனெனில், உண்பதும், உறங்குவதும், புணர்வதும் தேக இச்சையைப் பேணுவதாகும். இந்தக் குணம் மிருகங்கள் முதலான பிராணிகள் அனைத்திற்குமே உள்ளது. ஒட்டகையானது மனிதன் உண்ணுவதை விட அதிகமாகத் தின்னுகின்றது. சிட்டுக்குருவியானது மனிதனை விடவும் அதிகமாகப் போகம் செய்கிறது. எனவே இவைகளை விடவும் மனிதன் எவ்வாறு சிறந்தவனாவான்?

மேலும், இதர படைப்புக்களை அடக்கியாளும் குணமானது கோபத்தினால் உண்டாகின்றது. இந்தக் குணமானது துஷ்ட மிருகங்களுக்கு மனிதனை விட அதிகமாயுள்ளது. புலி, சிங்கம், கரடி போன்ற துஷ்ட விலங்குகளின் கோபத்தின் முன்னால் மனிதனின் கோபம் எம்மாத்திரம்? இவனால் அவ்விலங்குகளுக்கு முன் நின்று தாக்குப் பிடிக்க முடியுமா? பின்னர் எவ்வாறு அடக்கியாளும் தன்மையில் மனிதன் சிறந்தவனாக முடியும்?

எனவே மனிதனில் இவ்விரண்டு குணங்களும் இருப்பதுடன் இதற்கும் மேலான விஷேடமான குணமொன்றும் அவனுக்குக் கொடுக்கப்பட் டுள்ளது. அதுதான் ‘அக்லு’ என்னும் புத்தி யென்கிற அறிவாகும். இதனால்தான் அவன் தனது இரட்சகனான அழ்ழாஹுத்தஆலாவை அறிகின்றான். இதனாலேயே சகல வினோதங்களையும், படைப்புக்களையும் தெரிந்து கொள்கின்றான். இதன் உதவியினால்தான் ஆசையும், கோபமுமாகிய பித்துக்களில் இருந்து தன்னை விடுவித்தக் கொள்கின்றான். இந்த ‘அக்லு’ என்னும் குணமானது, மலக்குகளுக்குரியதாக இருக்கும். மனிதன் இந்தக் குணத்தினாலேயே மேய்கின்ற மிருகங்களையும், துஷ்ட மிருகங்களையும் தன்னிலும், புறத்திலுமாக அடக்கி ஆளுகின்றான்.

‘வானங்களிலுள்ளவை பூமியிலுள்ளவை எல்லாவற்றையும் அவன் உங்களுக்கு வசப்படுத்தினான்’ என்று அழ்ழாஹுத்தஆலா கூறியிருப்பதுபோல் சகலமும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளன. ஆதலால் எந்தக் குணத்தினால் மனிதனுக்கு ‘கமாலிய்யத்’ என்கிற பூரணத் தன்மை ஏற்படுகின்றதோ அதுவே அவனுக்குரிய சிறந்த குணமாகும்.

மற்றக் குணங்களெல்லாம் மனிதனது உதவிக்கும், ஊழியத்துக்குமாகவே அவனுடன் அனுப்பப்பட்டுள்ளன. இதனால்தான் மனிதன் மரணித்தவுடன் அவனது ஆசையும், கோபமும் நிலைத்திருக்காமல் அழிந்து போகின்றன. ஆயினும் அந்த ‘ஜௌஹர்’ஆன ஆதாரப் பொருள் மாத்திரம் அழ்ழாஹுத்தஆலாவின் ‘மஃரிபத்’ என்னும் இறைஞானத்தினால் பிரகாசம் அடைந்தாவது அல்லது ‘ஜஹ்ல்’ என்னும் அறியாமையினால் இருளடைந்து முகங் கவிழ்ந்தாவது இருக்கும்.

மஃரிபாவினால் பிரகாசமடைந்த அந்த ஜௌஹரோ மலக்குகளின் தன்மை பெற்று அவர்களோடு சேர்ந்திருக்கும். மலக்குகளோ எப்போதும் அழ்ழாஹுத்தஆலாவுடைய திருச் சமூகத்தில் இருக்கின்றனர்.

‘அடக்கியாளும் வல்லமையுள்ள அரசனுடைய சமூகத்தில் மெய்யான இருப்பில் இருக்கிறார்கள்’ என்று அருளப்பட்ட இறை வாக்கை இத்தருணத்தில் நீ உற்றுணர்ந்து தெளிவடைவாயாக! (ஆன்மீகம் வளரும்)

பார் போற்றும் பெருமானார் பெரு வாழ்வு – அங்கம்: 5 நுபுவ்வத்திற்கு முன்

பி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே எல்லா மக்களிடமும் காணப்பட்ட நற்பண்புகள் அனைத்தையும் தனக்குள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தார்கள். நேரிய சிந்தனை, ஆழ்ந்த பார்வை, நுண்ணறிவு அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தார்கள். நீண்ட மௌனத்தால் ஆழ்ந்து சிந்தித்து உண்மையை அறிவார்கள். தங்களது முதிர்ச்சியான அறிவாலும் தூய இயற்கைக் குணத்தாலும் மனித வாழ்வின் பகுதிகளையும், மக்களின் செயல்களையும், சமூகத்தின் நிலைகளையும் மிகத் தெளிவாக ஆராய்ந்து மக்களிடம் காணப்பட்ட மூடப் பழக்க வழக்கங்களை வெறுத்து ஒதுக்கினார்கள். மக்களுடன் மதி நுட்பத்துடன் பழகுவார்கள். அவர்கள் நன்மையானவற்றில் ஈடுபடும்போது தானும் கலந்து கொள்வார்கள். தீமையானவற்றில் ஈடுபட்டால் அவர்களை விட்டும் தனித்து விடுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மது அருந்தியதில்லை. சிலைகளுக்குப் பலியிட்டதை உண்டதில்லை. சிலைகளுக்கான விழாக்களில் கலந்து கொண்டதில்லை. சிலைகளை முற்றிலுமாக வெறுத்தார்கள். லாத், உஜ்ஜா போன்ற சிலைகளைக் கொண்டு சத்தியம் செய்வதைச் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

இறைவனின் பாதுகாப்பு அவர்களைச் சூழ்ந்து இருந்தது. உலக இன்பங்களின் மீது ஆசை தோன்றும்போதும், தவறான அறியாமைக் காலப் பழக்க வழக்கங்களில் ஆவல் ஏற்படும்போதும் அவற்றிலிருந்து அழ்ழாஹ்வின் அருளால் தடுக்கப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அறியாமைக்காலச் செயலை செய்ய வேண்டுமென நான் இருமுறை மட்டுமே விரும்பினேன். அந்த இரு முறையும் அழ்ழாஹ் என்னைத் தடுத்து விட்டான். பிறகு அழ்ழாஹ் தூதுத்துவத்தை எனக்கு அருளும்வரை அந்த எண்ணம் ஏற்பட்டதே இல்லை.’

‘ஓர் இரவு மக்காவின் மேற்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவரிடம் என் ஆடுகளை நீ பார்த்துக் கொள். மக்காவில் வாலிபர்கள் இராக்கதை பேசுவதுபோல் நானும் பேசி வருகின்றேன் என்று நான் கூறினேன். அவர் ஒப்புக் கொண்டார். நான் வெளியேறி மக்காவினுள் நுழைந்து அதில் முதல் வீட்டைக் கடந்தேன். அங்கிருந்து வந்த இசைச் சப்தத்தைக் கேட்டு அது என்னவென்று விசாரித்தேன். அதற்கு மக்கள் இன்ன ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடிந்து இன்று முதலிரவு என்று கூறினர்;. நான் அதைக் கேட்கவென்று அமர்ந்தவுடன் என்னால் செவியேற்க முடியாத வகையில் அழ்ழாஹ் என்னைத் தடுத்துத் தூங்கச் செய்து விட்டான். இறுதியில் சூரிய வெப்பம்தான் என்னை எழுப்பியது. எனது தோழரிடம் நான் சென்றபோது அவர் என்ன நடந்ததென விசாரிக்க நான் நடந்ததைக் கூறினேன். அதற்குப் பிறகு நான் எந்தவொரு தீய செயலையும் செய்ய எண்ணியதில்லை.’

ஜாபிர் இப்னு அப்துழ்ழாஹ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘கஅபாவைப் புதுப்பிக்கும் பணியின்போது நபியவர்களும், அப்பாஸும் கற்களை எடுத்துக் கொடுக்கும் பணியைச் செய்தார்கள். அப்போது அப்பாஸ், நபி (ஸல்) அவர்களிடம் ‘உங்களது கீழாடையைக் கழற்றி புஜத்தில் வைத்துக் கொண்டால் கற்கள் அழுத்தாமலிருக்கும்’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தன் ஆடையைக் கழற்றி புஜத்தில் வைத்ததும் கண்கள் மேலே சொருக மயக்கமடைந்து விட்டார்கள். பிறகு அவர்கள் தெளிவடைந்து ‘என் கீழாடை என் கீழாடை..!’ என்று கூறவே நபியவர்களுக்கு அப்பாஸ் அந்த ஆடையை உடுத்தி விட்டார்கள். அதற்குப்பின் அவர்களின் மறைவிடத்தை எவரும் பார்த்ததில்லை.’

நபி (ஸல்) அவர்கள் தங்களது கூட்டத்தாரிலேயே மிகவும் இனிய குணம், உயர் பண்பு, சிறந்த ஒழுக்கம், மனிதாபிமானம் உடையவர்களாகவும், மென்மையானவராகவும், நன்மை செய்யக்கூடியவராகவும், அமானிதம் பேணி வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்று பவராகவும் இருந்தார்கள். இந்த உயர் பண்பு களைக் கண்ட அவரது சமூகத்தார்கள் அவர்களை ‘அல் அமீன்’ நம்பிக்கையாளர் என்று அழைத்தனர்.

அவர்கள் பிறர் சிரமங்களைத் தானே தாங்கிக் கொள்வார்கள். இல்லாதோருக்கும், எளியோருக்கும் கொடுப்பார்கள். விருந்தினர்களை உபசரிப்பார்கள். சிரமத்தில் தவிப்பவர்களுக்கு உதவுவார்கள். இவ்வாறுதான் அன்னை கதீஜா (ரழி), நபி (ஸல்) அவர்களைப் பற்றி வர்ணிக்கிறார்கள். (பெருவாழ்வு தொடரும்)
.

ஆசிரியர் எழுத்து: ஒற்றுமைக் கயிறும் உலமா சமூகமும்

அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்..)

‘ஒற்றுமையென்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அதில் பிரிந்து விடாதீர்கள்’ என நீண்ட காலமாகவே அல்குர்ஆனிலுள்ள (3:103) இத்திருவசனத்தை பிரச்சார மேடைகளில் தவறாகப் பிரச்சாரப்படுத்தி வருகிறார்கள்.

நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதனால் ஒற்றுமை பாதிக்கப்படும் என்றிருந்தால் அந்த ஒற்றுமைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சமூகம் பிளவுபட்டு விடும் வகையில் இங்கே நடக்கின்ற தீமைகளைச் சுட்டிக்காட்டி மக்களைத் தடுக்க முனையக் கூடாது; வீணான குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என்றும் இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டியவாறும் சிலர் வாதிட்டும் வருகின்றனர்.

இவர்களின் இவ்வாதத்திற்கு இத்திருவசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால் அல்லது சீதனம் வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அத்தீமைகளைச் செய்யுமாறு அழ்ழாஹ் கூறுவானா? என்றுகூட இவர்கள் சிந்திப்பதாக இல்லை. ஊரைக் குழப்பக் கூடாது; ஒற்றுமையைச் சிதைக்கக்கூடாது என்றே ஒப்பாரி வைக்கிறார்கள்.

‘அழ்ழாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்’ என்றுதான் இத்திருவசனம் கூறுகிறது. அழ்ழாஹ்வின் கயிறு என்பது திருக்குர்ஆனும், அதன் விளக்கவுரையான நபி (ஸல்) அவர்களின் வாக்கும், வாழ்வும்தான்.

சரி; இதனைப் போதிக்கின்ற எமது வழிகாட்டிகளான மார்க்க அறிஞர்களிடமே இன்று ஒற்றுமை காணப்படவில்லை. மார்க்க விடயங்களைச் சொல்வதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் உலமாக்களின் ஒன்றியமான ‘அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா’வின் ‘பத்வா’ எனும் மார்க்கத்தீர்ப்பை பெற்றுச் செயற்பட இவர்களும் முனையாது, அவர்களும் அதனைத் துணிந்து வெளியிடாது உலமாக்களையும், பள்ளிவாயல் நிர்வாகிகளையும், முஸ்லிம் ஜமாஅத்தார்களையும் பொலிஸ் நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் செல்வதற்கு வழியேற்படுத்தி இருக்கிறார்கள். பின் எவ்வாறு ஒற்றுமையைப் பேணுவது? கயிற்றைப் பிடிப்பது?

எல்லாமே ஒரு கயிறு திரிப்புத்தானா? என சிரிப்புடனும், சிந்தனையுடனும் கேட்கத் தோணுகிறதல்லவா?

புதிய காத்தான்குடிக்கான புதிய தபாலகத்தை திறந்து வைப்பதில் ஏன் இந்தப் புறக்கணிப்பு?

Post0227Post0228Post0230Post0231Post0232Post233Post-Hakeem-1புதிய காத்தான்குடிக்கு என்று தனியான தபாலகக் கட்டிடமொன்று பல லட்சம் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள போதிலும் பல வருடகாலமாக அக்கட்டிடம் திறக்கப்படாமலேயே இருந்து வருகின்றது.

இதேவேளையில் காத்தான்குடி ப.நோ.கூ. சங்கத்திற்குச் சொந்தமான வாடகைக் கடையொன்றில் இயங்கிவரும் புதிய காத்தான்குடி தபாலகம் பல்வேறு அசௌகரியங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் புதிய காத்தான்குடி தபாலகம் 2ம் தரத்திலான தபாலகமாகத் தரம் உயர்த்தப்பட்ட போதிலும் எந்த வகையிலும் அதன் தரம் உயர்ந்து காணப்படவில்லை.

தபால் விநியோக சேவை ஒன்றைத் தவிர பிரதான தபாற் கந்தோர் ஒன்றில் மேற்கொள்ளப்படும் அனைத்து சேவைகளும் இத்தபால் நிலையத்தில் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து துரிதமாகப் பணம் அனுப்பு கின்ற ‘ஈஸ்ட்டர்ண் மணி ட்ரான்ஸ்பர்’ சேவையும் இங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக விளம்பரப்பலகை நிறுவப்பட்டுள்ளது.

இத்தபால் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள பெறுமதிமிக்க கணனி இயந்திரங்கள், பெக்ஸ் இயந்திரம் போன்றவையும் மக்களின் பாவனைக்கு விட இடவசதியற்ற நிலை காரணமாக காட்சிக்கு மாத்திரம் அவை இத்தபாலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட வேண்டிய ஆவணங்களும் பண்டல் பண்டல்களாக இங்கு கட்டப்பட்டு குவிக்கப்பட்டுள்ளன.

இங்கு கடமையாற்றும் தபாலகப் பணியாளர்களுக்கு எவ்வித வசதிகளும் இல்லை. குடி நீருக்கும், இயற்கைக் கழிப்புகளுக்கும் தபாலகத்தை விட்டு எங்கேயாவது சென்று தொலைக்க வேண்டிய அவலத்தில் அவர்கள் காணப்படுகின்றனர். சிறு தலையிடி ஏற்பட்டாலும்கூட சற்று ஓய்வெடுத்துச் செயற்பட அவர்களுக்கு ஓய்வறை வசதியும் இல்லை. அவர்கள் நிற்பதற்கும், அமர்வதற்கும் மாத்திரமே தற்போதைய வாடகைத் தபாலகத்தில் இடம் காணப்படுகின்றது.

பல லட்சம் ரூபாய் செலவில் கடற்கரை வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தபாலகக் கட்டிடத்தில் ஆட்டோ வாகனங்கள் பாதுகாப்பாக நிறத்தி வைக்கப்பட்டுள்ளன. சுற்றிவர புதர்களும், மரங்களும் வளர்ந்து காணப்படுகின்றன. இத்தனை விசாலமான கட்டிடமொன்றைக் கட்டி வைத்துக்கொண்டு ஏன்தான் இவ்வாறான ‘கோழிக்கூடு’ போன்ற வாடகைக் கட்டிடத்தில் இத்தபாலகத்தை இயங்கச் செய்ய வேண்டும்? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் றவூப் ஹக்கீம் அவர்கள் அரசாங்கத்தடன் இணைந்து தபால் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்தவுடன், “அமைச்சர் றவூப் ஹக்கீம் ஆவன செய்வாரா?’ என்று ‘வார உரைகல்’ 16.02.2007ல் தனது 37வது பதிவில் முன்பக்கத்திலேயே தலைப்புச் செய்தி வெளியிட்டது வாசகர்கள் அறிந்ததே!

எனினும் அவர் அதனைக் கண்டு கொள்ளாமலும், திறந்து வைக்காமலுமே அரசாங்கத்தை விட்டு வெளியேறி தனது சமூகத்திற்காகப் போராடச் சென்ற விட்டார். மக்கள் அதிகாரத்தைக் கொடுத்தாலும் இவர்கள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களாக இல்லை.

இப்போதாவது அரசாங்கத்துடன் இணைந்து மாகாண மட்டத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தத் தபாலகத்தைத் திறந்து வைத்து மக்களினதும், தபாலகப் பணியாளர்களினதும் வசதிகளை அதிகரிப்பார்களா? அல்லது அவர்களும் அப்படியே கண்டு கொள்ளாமல் காலத்தைக் கடத்துவார்களா? எத்தனையோ கட்டிடங்களை முண்டியடித்துக்கொண்டு திறந்து வைப்பதில் அவசரம் காட்டும் அரசியல்வாதிகள் ஏன்தான் இந்தப் புதிய காத்தான்குடிக்கான தபாலகத்தை கண்குறையக் காணுகின்றார்களோ.. அது அந்த ஆண்டவனுக்கத்தான் வெளிச்சம்!

14 நாட்களுக்குள் நகரைச் சுத்தப்படுத்துமாறு நகரசபைக்கு சுகாதாரப் பிரிவு அறிவித்தல்

Dengu0061Dengu0235காத்தான்குடி நகரசபை நிர்வாகத்தை 14 நாட்களுக்குள்ளாக டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், சுற்றுப்புறச் சூழல்களைப் பேணுமாறும், பிரதேசத்தைச் சுத்தமாக வைத்திருப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படியும் பிரதேச சுகாதாரப் பணிமனையால் உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் கேட்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதாரப் பரிசோதகர்கள் ‘வார உரைகல்’ லுக்குத் தெரிவித்தனர்.

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்த கையோடு டெங்கு ஆட்கொல்லி நோயைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்தள்ளதும் தெரிந்ததே. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் விஷேட கூட்டமொன்று அண்மையில் நடாத்தப்பட்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தமாறும், உரிய நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கும், உள்ளுராட்சி சபைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கமைய காத்தான்குடிப் பிரதேசத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பிரதேச சுகாதாரப் பணியக அதிகாரிகள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிப் பிரிவுத் தொண்டர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் வீடு வீடாகச் சென்று களப் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு சகல குடும்பத் தலைவர்களுக்கும் டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

எனினும் காத்தான்குடி நகரசபை இச்செயற் திட்டத்திற்கு தனது ஆதரவை முழுமையாக வழங்கவில்லை என்றும், ஒரேயொரு நாள் மாத்திரமே நகர சுத்திகரிப்பு வாகனங்களைத் தந்து தமது நடவடிக்கைகளுக்கு ஓத்துழைப்பு நல்கியதாகவும் பிரதேச சுகாதாரப் பரிசோதகர்கள் குற்றஞ்சாட்டியதுடன் 14 நாட்களுக்குள் நகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு எழுத்து மூலம் அறிவுறுத்திள்ளதாகவும் தெரிவித்தனர்.

பிரதேசத்தின் பெரும்பாலான வடிகான்கள் சீரான வடிந்தோடும் அமைப்பின்றி துர்வாடையுடன் கழிவு நீர் தேங்கிக் காணப்படுகின்றன. தனியாரின் வளவுகளில் குப்பை கூழங்கள் தேங்கிக் காணப்படுகின்றன. வீதிகள் தோறும் குப்பைகள் நிரம்பிக் காணப்படுகின்றன. இந் நிலையில் இப்பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சலினால் பாத்திமா ஸபா என்ற சிறுமி மரணம் அடைந்து இன்றுடன் 40 நாட்கள் பூர்த்தியாகின்றன.

‘பசுமை நகரை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளைத் தமது இலக்காகக் கொண்ட காத்தான்குடி நகரசபை நிர்வாகம், டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் காட்டும் அசமந்தம் குறித்து வரியிறுப்பாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நாம் தேசப்பற்றுடன் வாழ்வோமாயின் எம் உயர்வும் உரிமையும் நிச்சயமாகும் -லண்டனுக்கான புதிய துணைத் தூதுவர் அம்ஸா

PMGG-Hamza0244‘நாட்டுப்பற்றுடையவர்களாக நாம் ஒவ்வொருவரும் வாழ்வோமானால் நமக்கான உரிமைகளும், சமூக மதிப்பும் தானாகவே அரசிடமிருந்து கிடைக்கும்’ என லண்டனுக்கான இலங்கையின் புதிய துணைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள அல்ஹாஜ் பி.எம்.எம். அம்ஸா தெரிவித்தார்.

கடந்த மூன்றாண்டுகளாக சென்னையிலிருந்து இலங்கை துணைத் தூதுவராகப் பணியாற்றிய அல்ஹாஜ் அம்ஸா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இலங்கை அரசாங்கம் பாசிசப் புலிப் பயங்கரவாதத்;தை முறியடிக்க நடாத்திய இறுதிப் போர்க்காலத்தின்போது தமிழகத்திலும், சர்வதேச நாடுகள் பலவற்றிலும் இருந்து ஆர்ப்பரித்து எழுப்பப்பட்ட இலங்கை அரசுக்கு எதிரான பிரசார முயற்சிகளையெல்லாம் தனது ராஜதந்திர முயற்சிகள் மூலம் மழுங்கடிக்கச் செய்து ஆற்றிய தேசாபிமான சேவையை கௌரவித்து எதிர்வரும் ஆகஸ்ட் முதல் ஐக்கிய இராச்சித்திற்கான துணைத் தூதுவராக ஜனாதிபதி அவரை நிமித்துள்ளார்.

காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட தூதுவர் அம்ஸா அவர்களின் இந்நியமனத்தை முன்னிட்டு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடந்த 04ம் திகதி சனிக்கிழமை மாலை பாராட்டு நிகழ்வொன்றை தம் இயக்க மட்டத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அதன்போது கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அங்கு மேலும் கூறியதாவது:

‘முஸ்லிம்கள் எனும் சமூகப்பற்றுடன் இலங்கையர்கள் என்கிற தேசப்பற்றும் எங்களிடம் மிகக்க வேண்டும். நாட்டுப்பற்றுமிக்கதாக நமது செயற்பாடுகள் அமைய வேண்டும். சமூகப்பற்று, பிரதேசப்பற்று என்பவற்றை விட இது நமது தேசம் என்கிற உணர்வுடன் எமது செயற்பாடுகள் அமையும்போது நாம் எதிர்பார்க்கும் சமூக உயர்வும், ஏனைய உரிமைகளும் தானாகவே நமக்கக் கிடைக்கும்.’

‘நான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பிறந்த இம்மண்ணை வெகுவாகவே நேசிக்கின்றேன். என்றாலும் இப்பிரதேசத்துக்கு இதுவரை பெரிதாக நான் எதனையும் செய்யாவிட்டாலும், எனது நாட்டிற்கு விசுவாசத்துடன் நிறையவே பங்களிப்புக்களை வழங்கியுள்ளேன். எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக செயற்பட்டு இந்த நாட்டை வளமுள்ள ஒரு நாடாக மிளிரச்செய்ய என்னாலான பங்களிப்புக்களைச் செய்வேன்.’ என்றார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நளீமியின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. அதன் சூறா உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம். அப்துர்ரஹ்மான், காத்தான்குடி ம.ம.வி. தேசிய பாடசாலையின் அதிபர் ஜனாப்.எம்.எம். றபீக் ஆகியோரும் அங்கு உரையாற்றினர்.

மேற்படி பாடசாலையின் பழைய மாணவரான தூதுவர் அம்ஸா, இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் வளர்ச்சிக்காக 25,000 ரூபாவை நிதியுதவியாக அளித்ததிருப்பதாகவும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வெற்றியை அங்கீகரித்து காத்தான்குடியில் ஆயுதங்கள் கையளிப்பு

Arms05960Arms05968Arms05994Arms06004பாசிஷப் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கம் ஈட்டியுள்ள வரலாற்று வெற்றியை அங்கீகரித்துள்ள காத்தான்குடிப் பிரதேச முஸ்லிம் இளைஞர்கள் தங்களிடம் இருந்த சட்டவிரோதமான ஆயுதங்களை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைவாகக் கையளித்த நிகழ்வு, கடந்த 4ம் திகதி சனிக்கிழமை மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் பாசிஷப் புலிகள் 1990 ஆகஸ்ட் 03ம் திகதி இரவு இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் சகோதரர்களைக் கோரமாகச் சுட்டுப் படுகொலை செய்த காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் வைபவ ரீதியாக இடம்பெற்றது.

கடந்த 30 வருடங்களாக புலிப் பயங்கரவாதிகளுடன் மேற்கொண்டிருந்த யுத்தத்தை மே 18ம் திகதி அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்ததையடுத்து கடந்த ஜூன் 19ம் திகதியன்று காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் முஸ்லிம்களும் இனித் தங்களிடமுள்ள சட்டவிரோதமான ஆயுதங்களை இம்மாதம் 02ம் திகதிக்கு முன்னதாக கையளித்து விட வேண்டுமென அரசாங்கத்தின் சார்பில் பகிரங்கமான வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததுடன் இரு தினங்கள் கூடுதல் கால அவகாசத்தைப் பெற்று கடந்த 04ம்திகதி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இதன்போது தமது சமூகத்தின் பாதுகாப்புக்காக பிரதேச இளைஞர்களினால் பெறப்பட்டிருந்த ஆயுதங்கள் மேற்படி பள்ளிவாசலில் வைத்து பாதுகாப்புத்துறை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் முன்பதாக அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. பிரதேச இளைஞர்கள் சார்பாக சமூக ஆர்வலர் சகோதரர் தௌபீக் ஹாஜியார் அவர்கள் இவ்வாயுதங்களை பெருமளவிhன முஸ்லிம்கள் முன்னிலையில் அரசாங்கத்திடம் கையளித்தார்.

இதுதொடர்பாக காத்தான்குடி ப.மு.நி. சம்மேளனம் விஷேட ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது. அதில் 1970களில் இருந்து தோற்றம்பெற்ற பயங்கரவாதச் செயற்பாடுகள் காரணமாக காத்தான்குடிப் பிரதேச முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பல்வேறு கள நிலவரங்களையும் விளக்கியிருந்ததுடன், பிரதேச முஸ்லிம்கள் இவ்வாறான சட்ட விரோத ஆயுதங்களைப் பெறவேண்டியிருந்ததன் அவசியத்தையும், நியாயங்களையும் தெளிவுபடுத்தியும், தற்போது அரசாங்கம் ஈட்டியுள்ள இப்பயங்கரவாதத்துக்கு எதிரான போர் வெற்றியை மதித்தும், அரசின் வேண்டுகோளை கௌரவப்படுத்தியும் அரசாங்கத்தின் மேலுள்ள நம்பிக்கையுடனும் இவ்வாயுதங்களை மீளக் கையளிப்பதாவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாயுதங்களைப் பொறுப்பேற்ற அரசதரப்பு அதிகாரிகள் காத்தான்குடி முஸ்லிம்களின் இவ்வாயுதக் கையளிப்பை வெகுவாக மதித்து அரசாங்கத்தின் சார்பாகப் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், இதனை ஏனைய பிரதேசங் களிலுள்ள முஸ்லிம் மற்றும் தமிழ்ச் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் முன்மாதிரியாகக் கொண்டு தங்களிடமுள்ள சட்ட விரோதமாப் பெறப்பட்ட ஆயுதங்களை கையளிக்க முன்வர வேண்டுமெனவும் கூறியதுடன் அரசாங்கம் சகல சமூகங்களையும் சேர்ந்த இலங்கை மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் இங்கு தெரிவித்தனர்.

வளர்ச்சிக்கு உதவுங்கள்

‘வார உரைகல்’ பத்திரிகையினதும்,  இவ்விணையதள செய்திச் சேவையினதும் வளர்ச்சியை வரும்பும் வாசக அன்பர்கள் தமது நிதியுதவிகளை ‘M.I. Rahmathullah, S/Ac. No: 8003932, Bank of Ceylon, Kattankudy Branch (Sri Lanka) ‘ எனும் வங்கிக் கணக்கினூடாக அனுப்பி உதவலாம்.

ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயலில் புஹாரி மஜ்லிஸ் மீண்டும் ஆரம்பம்

காத்தான்குடி 05ம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் சுமார் நான்கு வருட கால இடைவெளிக்குப் பின்னர் தற்போது மீண்டும் புனித ‘ஸஹீஹுல் புஹாரி’ பாராயணம் செய்யும் வைபவம் இடம்பெற்று வருகின்றது.

சமீபத்தில் இப்பள்ளிவாயலில் இடம்பெற்ற ஜமாஅத்தார்களின் கலந்துரையாடலொன்றைத் தொடர்ந்தே இடைநிறுத்தப்பட்டிருந்த புனித ‘ஸஹீஹுல் புஹாரி’ பாராயண நிகழ்வு தற்போது ஆடம்பரமற்ற வகையில் இஸ்லாமிய ஷரீஆ நடைமுறைகளுக்கமைவாக இடம்பெற்று வருகின்றது. நேர்ச்சைகள், காணிக்கைகள் மற்றும் நார்ஸாக்கள் என்பன பெறுவதும், விநியோகிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பெண்களின் வருகையும் அனுமதிக்கப்பட மாட்டாது என ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். தினமும் இஷா தொழுகையின் பின் ஹதீஸ்கள் பாராயணம் செய்யப்பட்டு சங்கைக்குரிய உலமாக்களால் உபந்நியாசமும் கூறப்பட்டு வருகின்றது.