மின்னஞ்சல் வழியாக அனுப்பிய வினாவுக்கு தாருல் அதர் அத்தஅவிய்யா பதிலளிக்குமா?
‘பெண்கள் வளையல்களாலான தங்க நகைகளை அணியலாமா?’ எனும் தலைப்பில் நான் கீழ்வரும் ஆக்கத்தினை பல்வேறு வினாக்களைத் தொடுத்து காத்தான்குடி தாறுல் அதர் அத்தஅவிய்யாவின் மின் அஞ்சல் முகவரிக்கு சுமார் மூன்று முறை அனுப்பியிருந்தேன். எனினும் இதுவரை அவர்களிடமிருந்து எந்தவொரு பதில்களும் எனக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. ஆதலால் இதனை தங்களின் ‘வாரஉரைகல்’ பத்திரிகைக்கு அனுப்பி வைக்கின்றேன். ‘வார உரைகல்’ அடுத்த பிரதியில் இதனைப் பிரசுரித்தேனும் எனக்கு தக்க பதில்களை பெற்றுத் தாருங்கள். இதோ கடிதம் வருமாறு:-
‘நான் இதுவரை காலமும் கேள்வியுறாத மேற்படி தலைப்பில் தாங்கள் அண்மைக் காலமாக பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றீர்கள். இது ஒரு புதிய விடயமாக இருந்தாலும் உங்களின் அமைப்பினால் பல வருட காலமாக ஆய்வு செய்யப்பட்டு தெளிவான விடை காணப்பட்டதாக தங்களின் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். எனினும் தங்களின் தாருல் அதர் அமைப்பினை சில வருடமாகவே நான் அறிவேன். தங்களின் கருத்துக்களில் எந்தளவு நம்பகத் தன்மை காணப்படலாம் என்பதில் ‘இந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றீர்கள்’ என்ற கருத்து சற்று தளர்வைத் தோற்றுவிக்கின்றது.
இருந்தாலும் யாருக்கும் அஞ்சாமல் முற்போக்குடன் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உங்கள் கருத்துக்களைக் கச்சிதமாகக் காவுவதானது காத்தான்குடியைப் பொறுத்தமட்டில் வரவேற்கத்தக்கதே! எனக்கு பெண்கள் தங்க வளையல்களால் உருவாக்கப்பட்ட நகைகளை அணியலாமா? என்னும் விடயத்தில் பின்வரும் சந்தேகங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு என் மனம் திருப்தி காணும் வகையில் விடை பகர்ந்தால் தூய இஸ்லாம் தொடர்பில் உங்களின் கருத்துக்களை ஏற்று தற்போது நான் இருக்கும் நிலையிலிருந்து மீட்சி பெற முடியும்.
தாங்கள் இணையத்தில் பதித்திருக்கின்ற ஒலிப்பதிவுகள் தெளிவாக விளங்கவில்லை. ஆதலால் எனது பின்வரும் சந்தேகங்களுக்கு எழுத்து மூலம் விடைபகர்ந்தால் உதவியாக இருக்கும். சந்தேகங்கள்:
01.தங்கத்தினாலான வளையல்கள் சார்ந்த நகைளைத் தவிர வேறு ரகத்தில் (வடிவங்களில்) தங்கத்தில் நகைசெய்து அணியலாமா?
02.தங்கத்தில் நகை அணிவதனை விடுத்து ஏனைய உலோகங்களில் நகை செய்து அணியலாமா? உதாரணமாக செம்பு, வெள்ளி, பிளாற்றினம், பித்தலை, வெள்ளைத் தகடு, வெள்ளிரும்பு போன்ற இன்னும்பிற
03.பெண்கள் தங்க வளையல் நகைகள் அணியக் கூடாது என்றால் ஆண், பெண் இல்லாதவர்கள் அவற்றை அணியலாமா?
04.தங்க நகை அணிவது ஹறாம் என்றால் நகை வியாபாரம் செய்யலாமா? அது ஹறாமாகுமா? நமது இஸ்லாமியர்களுக்கு விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டது எனும் விவாதத்திற்கு வந்து ஏனைய மதத்தினருக்கு அல்லது கொள்கை உடையவர்களுக்கு அவற்றை விற்கலாம் என்றால் அவர்களுடன் எத்தகைய வியாபாரமும் மேற்கொள்ளலாமா? உதாரணமாக சாராயம், போதைவஸ்து, ஆபாசப் பொருட்கள் விற்பனை.
05.இவ்வளவு காலமும் தங்க நகைக் கடை வைத்து இஸ்லாமியர்களிடையே தொழில் புரிந்து இந்த விடயத்தில் உண்மையான தெளிவு கண்ட பின்னர் அவ்வாறு இவ்வளவு காலமும் அதனால் உழைத்த பணம், பொருட்களை என்ன செய்யலாம்? அவை ஹறாமாகுமா?
06.ஒருவர் நமது பிரதேசத்திலுள்ள வளையல்களினாலான தங்க நகை வியாபாரம் செய்யும் கடையில் தொழில் புரியலாமா? உடனே விலகிக் கொள்ள வேண்டுமா?
07.தற்கால நகைக்கடைகளில் தனித் தங்கத்திலான அணிகலன்களைக் காண்பது அரிதாகும். தங்கத்துடன் பிறிதொரு சேர்மானம் சேர்த்தே நகைகள் செய்யப்படுகின்றன. தனியே தங்கத்தில் நகை செய்யும்போது அவை இலகுவில் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையைப் பெறாது. ஆதலால் தங்கம், ஏனைய உலோகங்கள் (உதாரணமாக செம்பு, வெள்ளி, பிளாற்றினம், பித்தளை, வெள்ளைத் தகடு, வெள்ளிரும்பு முதலான) இணைந்த கலவைகளைக் கொண்டே நகைகள் வடிவமைக்கப்படுகின்றன. ஆகவே தங்கத்துடன் மிக்ஷர் செய்யப்பட்ட கலவை நகைகளைத்தான் இன்றைய நடைமுறையில் நம் பிரதேசங்களில் அதிகமானோர் அணிகின்றனர். மிக்ஷர் செய்யப்பட்ட இவற்றை அணியக் கூடாது என்று ஹதீஸ் ஆதாரம் உள்ளனவா? அல்லது தனியே தங்கத்தினால் செய்யப்பட்டதுதான் என்றுள்ளதா?
08.இந்த விடயத்தில் காது குத்துவது ஹறாம் என்றால் ஏற்கனவே குத்தப்பட்ட எமது தாய், பிள்ளைகள், மனைவிமார்களின் காதுகளில் காணப்படும் ஓட்டைகளுக்கு மார்க்கத்தீர்ப்பு என்னவாகும்? காது குத்தப்பட்ட அவர்களுடன் வாழலாமா?
09.இவ்வாறான கொள்கைகளை ஏற்கனவே அல்பானிய இமாம்கள் பரப்பிச் சென்று விட்டனர். அவர்களது மறுவடிவமே நீங்கள் என்று காத்தான்குடியிலுள்ள சில அமைப்புக்கள் கூறுகின்றனவே!? அல்பானிகளின் ஏஜென்டுகளாக தாறுல் அதரைக் கொள்ளலாமா?’ நன்றி!
RM.Rijaque Ahamed, Email ID: rijaqueahamed@yahoo.com 02.07.2009