Dr. ILM. Rifas MBBS M. Sc (Admin)
வைத்தியசாலை மீள் நிர்மாணம் தொடர்பான பணிகள் மிகுந்த தேக்க நிலையை அடைந்த நிலையில் மாவட்ட வைத்திய அதிகாரியான என்னால் செய்யக் கூடிய பணிகளை செய்யத் தொடங்கினேன்.
உதவிச் சுகாதார அத்தியட்சகர் அலுவலகத்திற்கும், மத்திய அமைச்சுக்கும் தொடர்ச்சியாக இது தொடர்பாக அழுத்தங்கள் கொடுப்பதும், நேரடியாகச் சென்று பேசுவதும் மட்டுமில்லாமல் இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளுடனும் தொடர்ச்சியாகத் தொடர்பினைப் பேணிக் கொண்டிருந்தேன்.
இறுதியாக இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி திரு. சமண என்பவருடன் தொடர்பு கொண்டபோது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை அவர் சொன்னார்.
அதாவது, நேர்வே செஞ்சிலுவைச் சங்கம் நமது காத்தான்குடி வைத்தியசாலையை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளதாகவும், ஆனால் கால இடைவெளி நீண்டு விட்டதால் ஏற்கனவே ஒதுக்கியிருந்த 450 மில்லியன் ரூபாய்கள் போதாது என்பதால் புதிய நிதி ஒதுக்கீட்டுக்காகக் காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு கிடைக்காவிட்டால் சில திட்டங்களைக் கைவிட்டு விட்டே நிர்மாண வேலைகளைத் தொடர வேண்டியேற்படும் எனவும் சொன்னார்.
ஆனால் ஒரு சில மாதங்களின் பின் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு கிடைத்திருப்பதாகவும், கட்டிட வேலைகளுக்கான ஒப்பந்தம் தயார்படுத்தப்படுவதாகவும் அவர் எனக்கு அறிவித்தார்.
இந்த வேளையில்தான் நமது காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதியதோர் சிந்தனை எழுச்சியோடும், கருத்துக்களோடும் இளைஞர்கள் அந்த அரசியல் களத்தில் காலடியெடுத்து வைத்தனர்.
இந்த இயக்கத்தின் எழுச்சிமிக்க கருத்துக்களோடு பல உள்ளுர் அரசியல்வாதிகளால் ஒத்துப்போக முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் இந்த இயக்கத்தினை எவ்வழியிலாவது ஒழித்துக்கட்ட வேண்டுமெனவும் தருணம் பார்த்திருந்தார்கள். இந்த இயக்கத்தில் நானும் ஒரு அங்கத்தவனாக இருந்தது, இந்த வரட்டுச் சிந்தனை அரசியல்வாதிகளுக்கு வயிற்றெரிச்சலை அதிகரித்து விட்டிருந்தது.
நகரசபைத் தேர்தலுக்கான திகதியும் குறிக்கப்பட்டு பிரச்சாரங்களும் முடுக்கி விடப்பட்டிருந்தன. இந்தப் பிரச்சார மேடைகளில் பிரச்சாரம் செய்வதற்காக கொள்கை கோட்பாடுகள் எதுவும் இல்லாதிருந்த இந்த அரசியல் வியாபாரிகளுக்கு காத்தான்குடி வைத்தியசாலை ஒரு சிறந்த பிடியாக அமைந்தது.
அதன் பின்னர் அவர்கள் அதற்கான கதை, திரைக் கதை, வசனம், டைரக்ஷன் என எல்லாவற்றையும் மேற்கொண்டு பொய்களையும், புரட்டுக்களையும் தாராளமாகக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தனர்.
அரசியலில் புளுகுகளையும், பொய் பேசுவதைமே மூலதனமாகக் கொண்ட நமது அரசியல்வாதி தனது மூலஸ்தானத்திலிருந்து கொண்டு நாளாந்தம் ஒவ்வொரு கதைகளைக் கட்டிவிட அவரது பின்தோன்றல்கள் அதை அள்ளி வந்து ஊர் மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருந்தனர்.
அவைகளை சிலர் நம்பினர். சிலர் நம்ப மறுத்தனர். பலர் குழப்பமடைந்தனர். ஆனால் நமது அரசியல்வாதியோ எதற்கும் சளைத்தவரல்லவே? அவரும் அன்றாடம் புதுப்புதுக் கதைகளையளந்தார். மக்களையும் காடையர்களாக்கி விட விடாமல் முயன்றார்.
அத்தனையும் சுத்தமான பத்தரை மாற்றுப் பச்சைப் பொய்கள்! அழகாக இட்டுக்கட்டப்பட்ட அபத்தங்கள்!! இறைவனை மறந்த இறுமாப்புக் கட்டவிழ்ப்புக்கள்!!
காத்தான்குடிக்கு வைத்தியசாலை வருவதை நான் தடுப்பதற்கு முயற்சி செய்வதாகவும், ஏனைய இனத்தவரோடு சேர்ந்து அதனைத் தடுத்தே விட்டதாகவும், அந்த அரசியல்வாதிதான் அங்கிங்கென ஓடியாடி அதனைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மேடைகளில் பீற்றினார். அவரது அரசியல் வாரிசுகளும் அதே பாணியிலேயே அவரைத் தொடர்ந்தனர்.
இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் முதுகெலும்பில்லாதவன்தான் பயப்படுவான். மூளை இல்லாதவன்தான் அவரது கதையளப்புக்களை நம்புவான் எனக் கூறிக் கொண்டு நானும் பிரச்சார மேடைகளில் துணிந்து நின்று தொடர் விளக்கங்களைக் கொடுத்து வந்தேன்.
எனது விளக்கத்தால் மக்களுக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. இன்னமும் வைத்தியசாலை தொடர்பாக மேடைப் பேச்சுக்கள் தொடருமாயின் நமது மக்களுக்கு முழு உண்மைகளும் தெரிய வந்துவிடும் என்றஞ்சிய அரசியல்வாதியும் அவரது எடுபிடிகளும் மேடைப் பேச்சுக்களைத் தவிர்த்து பேனாமுனையால் தமது பொட்டலங்களைக் கட்டவிழ்க்க முயன்றனர்.
முகங் காட்டாத மொட்டைகளும், முகவரி இல்லாத திடீர் இஸ்லாமிய அமைப்புக்களும் காலையிலும் மாலையிலுமாக பிரசுரங்களை வெளியிட்டு ஊரை நிறைத்தன.
உணர்சியைக் கிளறும் சுலோகங்களுடன் பெரும் பெரும் போஸ்டர்கள் சுவரெங்கும் இரவோடிரவாக கைக்கூலிகளைக் கொண்டு ஒட்டப்பட்டன.
‘யஹூதி றஸாராக்கள் வந்து விட்டார்கள்! காபிர்களுடன் சேர்ந்து காத்தான்குடி வைத்தியசாலையைத் தடுத்து விட்டார்கள்!!’
‘நல்லாட்சிக் கூட்டத்திற்கு சாவுமணியடிப்போம்’
‘நோர்வே பணம் தருகிறது! அரசாங்கம் அனுமதி தருகிறது!! இவர்கள் ஏன் தடுக்கிறார்கள்?’ என்றெல்லாம் பலவேறு விதமாக எமது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான சுலோகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஊரில் திரும்பும் திசையெங்கும் ஒட்டப்பட்டு அத்தனை மதிற் சுவர்களையுமே அசிங்கப்படுத்தினர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தப் போஸ்டர்கள் எழுதப்பட்ட இடமோ மக்கள் போற்றிய ஒரு பிரதான வேட்பாளரின் இல்லத்திலாகும்.
இதற்கு உறுதுணையாக இருந்தவர்களோ இஸ்லாமிய அறிவியற் கல்வி மேம்பாட்டுக்காகப் பாடுபடுவதாகக் கூறிய பலர். இதில் ஒரு தௌஹீத் பேசும் உலமாவும் அவரின் சகாக்களும் கூட உள்ளடக்கம்.
அவதூறுகளுக்கும், அபாண்டங்களுக்கும் கூட்டம் சேர்த்து உயிரூட்டினர். இம்மையில் இவர்கள் நம்மோடு இணையாவிட்டாலும் மறுமையில் நிச்சயமாக இவர்களும் நம்மோடு சேர்ந்தேதான் விசாரணைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையோடு இவற்றையெல்லாம் நாம் அல்லாஹ்விடமே பாரப்படுத்தினோம்.
இந்த வைத்தியசாலை பற்றிய விடயம் ஒன்றுதான் அந்த நகரசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தாரக மந்திரமாக அந்த அரசியல்வாதியாலும், அவரது அடி வருடிகளாலும் அவர்களின் பிரச்சார மேடைகளில் ஒப்பாரிக்கப்பட்டு வந்தன.
அவர்களின் அணியைச் சேர்ந்த இன்னும் சில வேட்பாளர்கள் இதிலுள்ள உண்மைத் தன்மையினை அறிந்து கொண்டு எம்மை அபாண்டமாக வசைபாடாமல் இறுதிவரை மௌனமாகவே இருந்தனர்.
சில முக்கிய புள்ளிகள் என்னிடம் தனிப்பட்ட ரீதியில் தமது மன வியாகூலங்களை வெளியிட்டு தங்களால் ஒன்றும் செய்ய முடியாதுள்ளதாக அவர்களின் கையாலாகத்தனத்தையும் சுட்டிக் காட்டினர்.
இது சூடான தலைப்பாக ஊரெல்லாம் பேசப்பட்டது. வழமைபோல் எமது மக்களும் வெறும் அவதானிகளாகவே இருந்தனர். எந்தவொரு பொதுமகனும் உண்மைய அறிவதற்கு ஆர்வமாய் இருக்கவில்லை.
ஏனெனில் இவ்வூரிலுள்ள எந்தவொரு பொதுமகனும் இந்த ஆஸ்பத்திரி விடயத்தில் என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிவதற்கு இன்று வரைக்கும் என்னிடம் எந்தக் கேள்வியையும் கேட்க முன்வர வில்லை. நமது அரசியல்வாதியின் பொய்யும், புரட்டும் பற்றி அவர்கள் அறிந்திருந்ததாலோ அல்லது நமக்கேன் இந்த வீண் வம்பு என்கிற பொதுப் புத்தியாலோ தெரியாது.
ஆனால் அந்த அரசியல்வாதியோ தனது பேச்சுக்கு புதிது புதிதாக வலுச் சேர்த்துக் கொண்டே இருந்தார். மக்கள் நம்பக்கூடிய வகையில் தினமொரு கதையைக் கட்டவிழ்த்துக் கொண்டே வந்தார். அதற்கு உதாரணமாக அவர் அவிழ்த்தவற்றில் ஒன்றை மாத்திரம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
ஒரு மேடையில் அவர் சொன்னார்:
‘டொக்டர் இந்த வைத்தியசாலையை இங்கு வராமல் தடுப்பதற்கு கடுமையாக முயற்சிக்கிறாரு… காலையில என்ன செய்கிறாரு.. நம்ம உதவிப் பிரதேச செயலாளரிடம் கையெழுத்து வாங்க ஓடுறாரு… அவட கையெழுத்த எடுத்துக்கிட்டு மட்டக்களப்பிலுள்ள RDHS ஒப்பீசுக்கு போறாரு. அங்க போய் கடிதத்தைக் கொடுத்து.. பாருங்க D.S.க்கும் விருப்பமில்ல.. அதனால ஹொஸ்பிடல்ல நிப்பாட்டுங்க என வேண்டுகோள் விடுறாரு..’
-இப்படி ஏராளமான இட்டுக்கட்டுக்கள் அவரால் அக் காலப்பகுதியில் மூட்டை மூட்டையாக பல பிரச்சார மேடைகளில், பெண்களுக்கான கருத்தரங்குகளில் அவிழ்க்கப்பட்டன.
இதில் நகைச்சுவையான விடயமென்னவென்றால், அவர் குறிப்பிட்ட அப்பெண் உதவிப் பிரதேச செயலாளரை அதுவரை நான் கண்டது கூடக் கிடையாது என்பதுதான்.
அவ்வாறு அவர் இட்டுக்கட்டிப் பேசியதற்கு அடுத்த நாள் எனது நண்பர் ஒருவருடன் அந்தப் பெண் உதவிப் பிரதேச செயலாளரைச் சந்திக்கச் சென்றேன்.
அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டபோது, ‘ஓ! நீங்கள்தானா அந்த டொக்டர்? நம்மைப் பற்றித்தானே பெரிய பேச்செல்லாம் உங்கள் ஊரில் பேசப் படுகிறதாம்?’ என்றவாறு புன்னகைத்துக் கொண்டே கேட்டார்.
‘ஆமாம். அதுதொடர்பாகத்தான் நாங்களும் உங்களுடன் பேசுவதற்கு வந்துள்ளோம்’ என்று உரையாடத் தொடங்கினோம். அந்த உரையாடலின்போது அவர் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டினார்.
‘உங்களது ஊர் மக்கள் ஒரு விடயத்தை யாராவது சொன்னால் அதை அப்படியே நம்பி விடுகிறார்கள். அது உண்மையா? பொய்யா? என விசாரித்துப் பார்ப்பதும் கிடையாது. அதை அப்படியே நம்புவது மட்டுமில்லாமல் அதற்கு தமது கருத்தையும் வெளியிட்டு அதனடிப்படையில் செயற்பட்டும் விடுகிறார்கள்’
இவ்வாறு அவர் கூறியதும் நமது புனித அல்குர்ஆன் சொல்கின்ற ‘கேள்விப்பட்தையெல்லாம் நம்பி விடாதீர்கள்’ என்ற கட்டளைதான் நினைவுக்கு வந்தது. அதுமட்டுமல்ல, ஏனைய சமூகத்தின் நமது சமூகம் தொடர்பான மதிப்பீடும் விளங்கியது.
அதனை நிரூபிக்கும் வகையில்தான் அடுத்த சில நாட்களில் நமது சகோதரர்களும் இங்கு செயற்படத் தொடங்கினார்கள்.
நமது அரசியல்வாதியின் பொய்ப் பிரச்சாரத்தை அப்படியே கேள்வி பார்வையின்றி குருட்டுத்தனமாகவும், முட்டாள்த்தனமாகவும் உள் வாங்கிக் ஒரு கூட்டம் கற்களோடும், தடிகளோடும் ஒரு பின்னிரவில் எனது வீடு நோக்கிப் படையெடுத்தது. என்னை ஒழித்துக் கட்டுவதாகக் கோஷமிட்டவாறே அக்கூலிக் கூட்டம் எனது வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
(உண்மைகள் வெளிவரும்)