‘வார உரைகல்’ ஐந்தாண்டு நிறைவை முன்னிட்ட ஈத் பெருநாள் சிறப்பிதழ் வெளியீடு – 10.09.2010
அன்பினிய வாசகர்களே…! அஸ்ஸலாமு அலைக்கும்.
‘வார உரைகல்’ பத்திரிகை 03.09.2005ல் மிகச் சிறியதொரு முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டது.
ஒரு ஊடகத்தை ஸ்தாபிப்பதற்கான எந்தவொரு ஆரம்ப அத்திவாரக் கட்டுமான திட்டமிடல்களோ ஏற்பாடுகளோ இல்லாமல் ‘சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும்’ என்கிற ஒரேயொரு குறிக்கோளை இலட்சியமாகக் கொண்டு கையிருப்பிலிருந்த 350 ரூபா முதலீட்டுடன் போட்டோ பிரதி ஏடாக இவ்வூடகத்தின் பயணம் அன்று ஆரம்பித்தது.
அல்ஹம்துலில்லாஹ்! எத்தனையோ இன்னல்கள், எச்சரிப்புக்கள், உயிர் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு மத்தியிலும் வாசகப் பெருமக்களும், விளம்பர அனுசரணையாளர்களும் சலியாது வழங்கிய பேராதரவினால் கடந்த ஐந்தாண்டு காலத்தில் இப்பயணத் தொடரானது அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளதோடு அதன் இலட்சியத்திலும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இன்று சமூக அநீதிகளைச் செய்வோருக்கு மத்தியில் ‘வார உரைகல்’ என்ற நாமத்திற்கு இருக்கின்ற அச்சமானது இந்த இலட்சியப் பயணத்தின் ஒரு குறிப்பிட்ட மைல்கல் அடைவேயாகும். இவ்வூடகப் பயணத்தில் எதிர்காலத்தில் இன்னும் சாதிக்க வேண்டியவை அதிகமுள்ளன.
அந்த வகையில் இதன் ஐந்தாண்டு நிறைவை முன்னிட்ட ஈத் பெருநாள் சிறப்பு மலர் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (நோன்புப் பெருநாள் தினம் என எதிர்பார்க்கப்படுகின்ற) 10.09.2010 வெள்ளிக்கிழமை வழமைபோல மிக எளிமையாக வெளியிடப்படவுள்ளது என்பதை எமது இணையதள அன்பர்களின் கவனத்திற்கு முன்கூட்டியே அறியத் தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
என்றும் நன்றியுடன்
உங்கள் பணியாளன் புவி றஹ்மதுல்லாஹ்
(பிரதம ஆசிரியன் – வார உரைகல்)