தூர நோக்கற்ற இன்றைய முஸ்லிம் அரசியல் தலைமைகளின் சுயநலன்கள் மிகைத்த செயற்பாடுகளினால் எமது முன்னோர் ஆற்றிய இந்நாட்டின் சுதந்திரத்திற்கான காத்திரமான பங்களிப்புகள் இன்று மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.
தேசியத்தையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி இந்நாட்டு மக்களின் ஐக்கியத்தையும், சகவாழ்வையும் முன்னெடுக்க வேண்டிய எமது முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அரசியல் தலைமைகள் பிரிவினைக் கோஷங்களையே இன்னமும் முன்வைத்து அரசியல் தீர்வைக் கோரி வருவதால் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள்மீது திட்டமிட்டு தீவிரவாத சாயம் பூசப்படுகின்ற அபாயகரமான சூழ்நிலை இன்று தோன்றியுள்ளது.
இவ்வாறு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் 64வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ‘வளமான இலங்கையைக் கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம’ எனும் தொனிப் பொருளில் இன்று (04.02.2012) சனிக்கிழமை காலை காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள அதன் மக்கள் சந்திப்பு அரங்கில் இடம்பெற்றபோதே அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை உறுப்பினர் ஜனாப். எஸ்.எம்.எம். பஷீர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு இன்று காலை 08:30 மணிக்கு ஆரம்பமாகியது.
பிரதேசத்தின் பிரமுகர்கள், உலமாக்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வை காத்தான்குடி நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் தேசியக் கொடியேற்றி ஆரம்பித்து வைத்தார். Continue reading →